பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில், சபாநாயகர் மற்றும் பேரவைச்செயலாளர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் அணி உட்பட அவரது அணி எம்எல்ஏக்கள் 11 பேர் மற்றும் எம்எல்ஏ அருண்குமார் செயல்பட்டதாகவும், அவர்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடுமாறும் திமுக கொறடா சக்கரபாணி, வழக்கு தொடர்ந்திருந்தார். ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன், செம்மலை, நடராஜ், ஆறுக்குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ் ஆகிய 11 பேர் கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்தாகவும், கோவை வடக்கு தொகுதியைச் சேர்ந்த அருண்குமார் கொறடா அனுமதி பெறாமல் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்ததாகவும் சக்கரபாணி மனுவில் தெரிவித்திருந்தார். பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து வரும் 12ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் தனபால், மற்றும் பேரவைச் செயலாளர் பூபதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.