பீரோவை அலேக்காக வெளியே தூக்கிய கொள்ளையர்கள்.. அடுத்தடுத்த வீடுகளில் 111 சவரன் கொள்ளை.!
திட்டக்குடி அடுத்த ஆலம்பாடி கிராமத்தில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் 111 சவரன் நகை, மற்றும் 7.20 லட்சம் கொள்ளை, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்கம் இருக்கும் கழிவறையின் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவைத் திறந்து அதில் வைத்திருந்த 74 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.
இதனையடுத்து அந்த வீட்டின் அருகில் இருந்த ராம்குமார் என்பவரின் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை திறக்க முயற்சித்துள்ளனர். பீரோவைத் திறக்க முடியாததால் அதை அப்படியே வீட்டின் பின்புறம் தூக்கிச் சென்று உடைத்து அதில் இருந்த 37 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
காலையில் எழுந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் விசாரணை செய்து வருகின்றனர் அருகருகே உள்ள வீடுகளில் 111 சவரன் நகைகள் மற்றும் 7.20 லட்சம் பணம் கொள்ளை போனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.