நெல்லையில் 103 கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டதா?

நெல்லையில் 103 கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டதா?
நெல்லையில் 103 கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டதா?

நெல்லையில் 103 கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நெல்லை அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், நெல்லையில் கொரோனா சிகிச்சை குறித்தும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, கொரோனா உயிரிழப்பு அடக்கத்திற்கு அரசு அளிக்கும் செலவு குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பியிருந்தார்.

இதற்கு ஆர்.டி.ஐ.யில் சொன்ன தகவல் 285. ஆனால் அரசுத் தரப்பில் அளித்த மரண எண்ணிக்கை 182 பேர். இதனால் 103 மரணங்கள் மறைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அடக்கச் செலவு குறித்தும், தனியார் மருத்துவமனையில் உயிரிழப்பு குறித்தும் தகவல் இல்லை என பிரம்மா குற்றம்சாட்டியிருந்தார். இச்செய்தியைக் குறிப்பிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

‘’திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தென்மாவட்டங்களில் இயங்கிவரும் பெரிய மருத்துவமனை ஆகும். கோவிட்-19 நோய்வாய்ப்பட்டவர்கள் அனைவரும் இந்த மருத்துவமனையைத் தான் நாடி குணமடைந்து வருகிறார்கள். கடந்த 5 மாதங்களில் 4238 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 3444 நபர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 130 பேர் குழந்தை பெற்று பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை சிகிச்சை பலனின்றி 285 நோயாளிகள் (25.08.2020 வரை) இறந்துள்ளனர். இவர்களில் 145 பேர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதுதவிர 19 பேர் தூத்துக்குடி, 88 பேர் தென்காசி மற்றும் 33 பேர் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்.

நேற்று மாலை இறப்பு எண்ணிக்கைகள் குறித்து தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.டி.ஐ. தகவல்களை தவறாக சித்தரித்து இறப்புகளின் எண்ணிக்கையை இம்மருத்துவமனை மறைத்து வருவதாக தவறாக கூறியுள்ளார்கள். எங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனாவை எதிர்த்துப் போராடும் போது அவர்களின் வாழ்க்கையையும் அவர்களது குடும்பத்தின் பாதுகாப்பையும் துச்சமென நினைத்து பணி செய்து வரும்போது, இதுபோன்ற தவறான தகவல்கள் மருத்துவர்களையும், செவிலியர்களையும் மன வேதனையடையச் செய்கிறது.’’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com