"பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது": சகோதரர் திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
தனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திவாகரனுக்கு அவரது சகோதரி சசிகலா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திவாகரனுக்கு 14 பக்க நோட்டீசை அனுப்பியுள்ளார். அதில் உடன்பிறந்த சகோதரி சசிகலா என ஊடகங்களில் திவாகரன் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சசிகலாவின் சகோதரி மகன் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கியுள்ள நிலையில், அதிமுக அம்மா அணியை நடத்தப் போவதாக திவாகரன் அறிவித்துள்ளார். இந்த நிலையில், திவாகரன் தனது பெயரையோ, படத்தையோ பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சசிகலா எச்சரித்துள்ளார். இதன்மூலம், சகோதரரான திவாகரனைப் புறக்கணித்து, தினகரனை சசிகலா ஆதரிப்பது தெளிவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.