உண்மையான விபத்து போல வலம்வந்த FAKE AI வீடியோ.. Fun-க்காக உருவாக்கிய இளைஞர் கைது!
கேரள மாநிலம் வயநாட்டில் ஜிப் லைனில் விபத்து ஏற்பட்டது போன்ற ஏஐ வீடியோவை உருவாக்கி பரப்பிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ உண்மை என நம்பி பலரும் பகிர்ந்த நிலையில், அது ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாக தெரியவந்தது. போலி வீடியோக்களை பரப்பி அச்சத்தை ஏற்படுத்துவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்திருக்கும் நிலையில் இளைஞர்கள் தங்கள் ரசனைகளை, கனவுகளை ஏஐ மூலமாக புகைப்படங்களாகவோ வீடியோக்களாகவோ தயாரித்து ரசிப்பது ஒரு ட்ரெண்டாகவே மாறியிருக்கிறது.
தங்களுக்கு தோன்றும் காட்சிகளையெல்லாம் வீடியோவாக உருவாக்கி அதனை சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர் ஒரு பிரிவினர்.
அந்தவகையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஜிப் லைனில் விபத்து ஏற்பட்டது போன்ற ஏஐ வீடியோவை உருவாக்கி பரப்பிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜிப் லைன் பயணத்தின் போது கைக்குழந்தையுடன் சென்ற பெண் ஒருவர் விபத்தில் சிக்குவது போன்ற வீடியோ கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை உண்மை என நம்பி பலரும் பகிர்ந்தனர். பின்னர் அது உண்மை இல்லை எனவும், ஏஐ தொழில்நுட்ப மூலம் அந்த வீடியோ உருவாக்கி சமூகவலைதளங்களில் பரப்பியதும் தெரியவந்தது.
இது தொடர்பாக வயநாடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் ஆலப்புழா பகுதியை சேர்ந்த அஸ்கர் என்பவர் போலி வீடியோவை உருவாக்கி அதனை சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது.
வயநாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தும் வகையில் இவர் செயல்பட்டதாக தெரியவந்திருக்கிறது. சைபர் கிரைம் போலீசார் இவரை கைது செய்திருக்கிறார்கள். இதுபோன்று போலியான வீடியோக்களை பரப்பி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள காவல்துறை எச்சரித்து இருக்கிறது.

