ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் பிஎஸ்-6 என்ஜின்.. பிஎஸ்-4 என்ஜினால் என்னதான் பிரச்னை..?

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் பிஎஸ்-6 என்ஜின்.. பிஎஸ்-4 என்ஜினால் என்னதான் பிரச்னை..?
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் பிஎஸ்-6 என்ஜின்.. பிஎஸ்-4 என்ஜினால் என்னதான் பிரச்னை..?

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பிஎஸ்-6 முறை அமலுக்கு வருவதால், உலகின் தரம் மிகுந்த எரிபொருளை பயன்படுத்தும் நாடாக இந்தியா மாற உள்ளது. பிஎஸ்-4 மற்றும் பிஎஸ் -6 முறைக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன என தெரிந்து கொள்வோம்.

டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் மாசு அதிகரித்து சிரமத்தை ஏற்படுத்தும் நிலையில், வாகனங்களால் ஏற்படும் புகை மாசுவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பிஎஸ்-6 ரக வாகனங்களை மட்டுமே விற்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பிஎஸ்-6 தர எஞ்சின்களுக்கு ஏற்றவாறு எரிபொருளும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகின் தரம் மிகுந்த எரிபொருளை பயன்படுத்தும் நாடாக சில மாதங்களில் இந்தியா மாற உள்ளது.

பெரும்பாலான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டின் இறுதியிலேயே பிஎஸ்-6 முறையிலான பெட்ரோல், டீசலை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு பதிலாக பிஎஸ்-6 வகை எரிபொருளை விநியோகத்திற்கு கொண்டு வர தீவிரமாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில், எரிபொருளில் உள்ள கந்தக சேர்மத்தின் அளவை அடிப்படையாகக் கொ‌ண்டே அதன் தரம் வரையறுக்கப்படுகிறது. அதன்படி பாரத் ஸ்டேஜ் எனப்படும் புகை மாசுக் கட்டுப்பாடு இந்தியாவில் 2000-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் இந்தியா 2000 என அழைக்கப்பட்ட நிலையில், பின்னர் பிஎஸ்-2 என அமல்படுத்தப்பட்டது. கடந்த 2010-ஆம் ஆண்டில் இந்தியாவில் பிஎஸ்-3 முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பிஎஸ் -3 வகை எரிபொருளில் 350 பிபிஎம் அளவிற்கு சல்ஃபர் சேர்க்கை இருந்தது.

தொடர்ச்சியாக தற்போது இந்தியாவில் பிஎஸ்-4 முறையிலான எரிபொருளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிஎஸ்-4 வகை எரிபொருளில் 50 பிபிஎம் அளவில் சல்ஃபர் சேர்மம் உள்ளது. ஆனால் வரும் ஏப்ரலில் நடைமுறைக்கு வர இருக்கும் பிஎஸ்-6 வகை எரிபொருளில் 10 பிபிஎம் அளவிற்கே சல்ஃபர் சேர்க்கை இருக்கிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசு பெருமளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்-4 நடைமுறைக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் தற்போது பிஎஸ்-6 வகை நடைமுறைக்கு வர உள்ளது.

மிகுந்த திட்டமிடலுக்குப் பிறகே பிஎஸ்-5 முறைக்கு மாறாமல் நேரடியாக பிஎஸ்-6 நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ்சிங் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ஒரு தயாரிப்பு விதி முறையிலிருந்து மற்றொரு தயாரிப்பு விதிமுறைக்கு மாறும்போது, அதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்க அதிக முதலீடு செய்ய வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், பிஎஸ்-6 வகை எரிபொருளை உற்பத்தி செய்ய ஆலையை மேம்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பிஎஸ் -4 ரக எஞ்சின் கொண்ட பெட்ரோலைப் பயன்படுத்தும் வாகனங்கள் பிஎஸ்-6 வகைக்கான எரிபொருளை பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், டீசல் வாகனங்களில் மட்டும் பிஎஸ்-6 வகை எரிபொருளை பயன்படுத்துவதில் சில பிரச்னைகள் எழலாம் என துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். பிஎஸ்-6 ரக வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகே அதன் பலன் தெரியவரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com