தடை நீங்கியதால் ப்ளே ஸ்டோருக்கு மீண்டும் வந்த டிக் டாக்
தடை நீக்கப்பட்டதால் டிக்டாக்கை தரவிறக்கம் செய்யும் வசதியை ப்ளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது.
‘டிக்டாக்’ செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு தடைவிதிக்கக் வேண்டும் என மதுரையைச் சேரந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘டிக்டாக்’ செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து ‘டிக்டாக்’ செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்து அந்நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘டிக்டாக்’ செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்தது. இதனிடையே ‘டிக்டாக்’ செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை ப்ளே ஸ்டோர் நீக்கியது.
இதைத்தொடர்ந்து ‘டிக்டாக்’ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், நிறுவனம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் ‘டிக்டாக்’ நிறுவனம் தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்று திட்டவட்டமாக தெரிவித்தது.
அதன்படி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை, ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு ‘டிக்டாக்’ செயலி மீதான தடையை நீக்கியது. இந்நிலையில் தடை நீக்கப்பட்டதால் டிக்டாக்கை தரவிறக்கம் செய்யும் வசதியை ப்ளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது.