புதிய பாதுகாப்பு அம்சமாக ஃபில்டர் கமெண்ட்ஸ் (Filter Comments) என்ற அப்டேட்டை டிக் டாக் கொண்டு வந்துள்ளது.
வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்று ‘டிக் டாக்’ செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் என்று மட்டும் இல்லாமல் வயது வித்தியாசங்களை தாண்டி இந்தச் செயலிகளுக்கான வாடிக்கையாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். ஒரு பாடலையோ, இசையையோ, அல்லது வசனத்தையோ பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்ப நடனமாடுவது, வசனம் பேசுவது, நடித்து காட்டுவது போன்றவற்றை இந்தச் செயலி மூலம் செய்யலாம்.
மனதளவில் பாதிக்கச்செய்வதாக கூறி சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலியைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்திலும் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அனுமதியில்லாமல் சிறுவர்களின் தகவல்களை திரட்டியதாக டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்து அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர் புகார்களுக்குப் பதில் அளித்த டிக் டாக் நிறுவனம், செயலி பாதுகாப்பானதாக மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் புதிய பாதுகாப்பு அம்சமாக ஃபில்டர் கமெண்ட்ஸ் (Filter Comments) என்ற அப்டேட்டை டிக் டாக் கொண்டு வந்துள்ளது. வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்வதை வடிகட்டும் விதமாக இந்த அப்டேட் விடப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல வார்த்தைகளை தானகவே இந்த பில்டர் கமெண்ட்ஸ் தடுத்து நிறுத்திவிடுகிறது.
மேலும் நமக்கு தேவையில்லை என்று நினைக்கும் வார்த்தைகளையும் அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. இதன் மூலம் பல குறுப்பிட்ட வார்த்தைகளை கமெண்டில் வராமல் தடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

