ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் பணம் அனுப்பும் வசதியை அந்நிறுவனம் இந்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் ஃபேஸ்புக். பயனாளர்கள் அதிகாலை கண் விழிப்பதும் இரவு கடைசியாக பார்த்துவிட்டு தூங்குவதும் ஃபேஸ்புக்கைத்தான் என்ற நிலைமைதான் தற்போது. பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி வியாபாரம், தேர்தல் பிரசாரம் என வணிக ரீதியிலாகவும் ஃபேஸ்புக் இயங்கி வருகிறது.
2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபேஸ்புக், 2008-க்கு பிறகு விஸ்வரூபம் எடுத்தது. பயனாளர்களின் மனநிலைக்கு ஏற்பவும், பயன்படுத்த எளிதாகவும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் மூலம் ஃபேஸ்புக் புதுப்பொலிவுடனே இருந்து வருகிறது.
இந்நிலையில் ஃபேஸ்புக் தங்களது நிறுவன செயலிகளான, இன்ஸ்டா, வாட்ஸ் அப் மூலம் பண பரிவர்த்தனை முறைகளை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்தது. அதன்படி ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் பணம் அனுப்பும் வசதியை அந்நிறுவனம் அமெரிக்காவில் இந்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளது.
பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்றே பண பரிவர்த்தனைக்கு ஃபேஸ்புக் சார்ந்த செயலிகளும் பயன்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அதிகமான பயனாளர்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் பயன்படுத்துவதால் பணபரிவர்த்தனை இன்னும் எளிதாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த பரிவர்த்தனை முறை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.