வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் !

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் !
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் !

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் இந்தியாவின் ‘கார்டோசாட் 3’ செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. 

1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன கார்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப்படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும்.

குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. இந்த 14 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டன. இது இஸ்ரோ விண்ணில் ஏவிய 49-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பதோடு, திறன் கூட்டப்பட்ட 21-ஆவது எக்ஸெல் ரக ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com