நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது சந்திராயன் !

நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது சந்திராயன் !
நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது சந்திராயன் !

நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி வடிவத்தில் நீர் இருப்பதை இந்தியா அனுப்பிய சந்திராயன் 1 விண்கலம் உறுதி செய்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்- 1 விண்கலம் 2008ஆம் ஆண்டு நிலவிற்கு அனுப்பப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக நிலவை சுற்றி வந்து ஆய்வில் ஈடுபட்டு வரும் இந்த விண்கலம், நிலவின் பல அரியப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் சந்திராயனில் இருந்து சிக்னலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பூமிக்கும், சந்திராயன் 1-க்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு நாசா விஞ்ஞானிகள் ரேடாரை பயன்படுத்தி சந்திராயன் 1 ஐ மீண்டும் உயிர்பெற வைத்தனர். தற்போது நிலவில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை சந்திராயன் படம்படித்து அனுப்பியது.

இதனை ஆய்வு செய்த நாசா விஞ்ஞானிகள் நிலவின் மேற்பரப்பில் உறைந்த நிலையில் நீர் இருப்பது உண்மை தான் என உறுதி செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து நிலவில் இருக்கும் நீர் குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்தவும் விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். நிலவில் தண்ணீர் இருப்பதை ஆய்வாளர்கள் நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்தியிருப்பது இதுவே முதல்முறையாகும். அதுவும் இந்திய விண்கலம் அதை உறுதி செய்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்துள்ள பெருமையாக பார்க்கப்படுகிறது.

நிலவின் வட மற்றும் தென் துருவங்களில் உள்ள பள்ளங்களில் பனிக்கட்டி வடிவில் ‌நீர் உறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பனிக்கட்டிகள் நிறைந்துள்ள பகுதிகளில் சூரிய வெளிச்சம் படாமல் இருப்பதாகவும், அதன் காரணமாக நீர் உறைந்த நிலையில் உள்ளதை சந்திராயன் கண்டுபிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சந்திரனில் இறங்கி ஆய்வு செய்வதற்காக மிகவும் சவாலான திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முயற்சித்து வருகிறது. இதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அனுப்ப இருந்த சந்திராயன்‌ 2 திட்டம் சில தொழில்நுட்ப பிரச்னை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்திராயன் 2 அடுத்த ஆண்டு நிலவின் தரைப்பகுதியில் களமிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது நிலவிலிருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைகொண்டு ரோவர் என்ற வாகனத்தின் உதவியுடன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். சந்திராயன் - 2 வில் உள்ள வாகனம் நிலவில் உள்ள மண், கல் உள்ளிட்டவற்றை சேகரித்து பூமிக்கு அனுப்பும். முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களில் செயல்படுத்தப்படும் சந்திராயன்-2 திட்டம் வெற்றியடைந்தால் நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் 4வது நாடு என்ற இடத்தை இந்தியா பிடிக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com