பிப்ரவரி மாதத்தில் தனது அடுத்த சீரிஸ் வகையான ஜி7 போனை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாக தற்போது மோட்டோரோலா செயல்பட்டு வருகிறது. நடுத்தர வர்க்க செல்போன் பயனீட்டாளர்களை குறி வைத்து போடப்பட்ட லெனோவா மற்றும் மோட்டோ போன் வகைகள் ஹிட் அடித்தன. அதே போல் 2019 ஆண்டையும் தன் வசப்படுத்திக்கொள்ள அந்நிறுவனம் முயற்சித்து வருகிறது.
அதற்காக தனது அடுத்த சீரிஸ் போனான ‘ஜி7’ஐ அடுத்த மாதம் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவலின் படி பிப்ரவரியில் பிரேசிலில் நடைபெற உள்ள விழாவில் ஜி7 போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ நிறுவனத்துக்கு பிரேசிலில் மிகப்பெரிய சந்தை உள்ளது. அதனால்தான் அறிமுக விழாவுக்கு மோட்டோ நிறுவனம் பிரேசிலை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே பிப்ரவரி கடைசியில் Mobile World Congress என்ற மொபைல் திருவிழா நடைபெற உள்ளது. இந்த மொபைல் திருவிழாவில் பல்வேறு செல்போன் நிறுவனங்களும் தங்களது தயாரிப்பை சந்தைக்கு அறிமுகம் செய்யும். இதனால் செல்போன் விற்பனையில் கடுமையான போட்டி நிலவும் என்பதால் தனது தயாரிப்பான ஜி7 ஐ பிப்ரவரி முதல் வாரத்திலேயே வெளியிட மோட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி மோட்டோ ஜி7, ஜி7 ப்ளஸ், ஜி7 ப்ளே, ஜி7 பவர் ஆகிய போன்கள் வெளியாகலாம். தற்போது சந்தையில் இருக்கும் ஜி6 போன்களுக்கு இது மாற்றாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
கவால்கம் டிராகன் 660 எஸ்.ஓ.சி, 4 ஜிபி ரேம் 64 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 3 ஜிபி ரேம் 32 ஜிபி சேமிப்பு வசதி, 2820 எம்.ஏ.எச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை போன்ற சிறப்பு வசதிகளை ஜி7 போன்கள் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் மோடோ ஜி7 ப்ளஸ் மாடல், கவால்கம் டிராகன் 710 எஸ்.ஓ.சி, 4 மற்றும் 6 ஜிபி ரேம் 64 ஜிபி சேமிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.