ஊழியர்களுக்கு 1.1 லட்ச ரூபாயை போனஸாக வழங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்
உலகம் முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு சுமார் 1.1 லட்ச ரூபாயை (ஒவ்வொரு ஊழியருக்கும் 1500 அமெரிக்க டாலர்கள்) போனஸாக டெக்னாலஜி சாம்ராட் நிறுவனமான மைக்ரோசாப்ட் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் சவாலான பேரிடர் காலத்தை சமாளித்தமைக்காக இந்த ஊக்கத்தொகையை ஊழியர்களுக்கு வழங்குகிறது மைக்ரோசாப்ட். இதனை தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை வெளியிடும் ‘தி வெர்ஜ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உத்தேசமாக 1,30,000 ஊழியர்கள் இந்த ஊக்கத்தொகையை பெறுவார்கள் என தெரிகிறது. அதாவது கார்பரேட் துணைத் தலைவர் பதவிக்கு கீழ் பணி செய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் உண்டு என கூறப்படுகிறது.
இதற்காக சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை மைக்ரோசாப்ட் செலவிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்கள் சிலர் ஊக்கத்தொகை குறித்த மின்னஞ்சல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக உறுதி செய்துள்ளனராம். அதே நேரத்தில் அந்த தொகை எவ்வளவு என்பது அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்படவில்லை என தெரிகிறது.

