Chandrayaan-3 | இந்தியாவின் நிலவு பயணத்தில் மேலும் ஒரு தமிழர்! யார் இந்த விஞ்ஞானி வீர முத்துவேல்?

சந்திரயான் 3-ன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி வீர முத்துவேல் குறித்து, இங்கு காணலாம்...
விஞ்ஞானி வீர முத்துவேல்
விஞ்ஞானி வீர முத்துவேல்Twitter
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல், சந்திரயான் 3-ன் திட்ட இயக்குனராக பணியாற்றி சந்திரயான் 3 விண்கல உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஏற்கெனவே சந்திரயான் -1 மற்றும் 2லும் திட்ட இயக்குனராக தமிழர்களே இருந்த நிலையில், மேலும் ஒரு தமிழர் இந்தியாவின் நிலவு பயண வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். அப்படியான விஞ்ஞானி வீர முத்துவேல் குறித்து, இங்கு காணலாம்...

விஞ்ஞானி வீர முத்துவேல்
விஞ்ஞானி வீர முத்துவேல்

விழுப்புரம் மாவட்டத்தில் ரயில்வே ஊழியரான பழனிவேலுக்கு மகனாக பிறந்தவர் வீர முத்துவேல். ரயில்வே பள்ளியில் படித்து, தொழிற்கல்வி பயின்ற வீர முத்துவேலுக்கு விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது. இதற்காக தொழிற்கல்வி படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வீரமுத்துவேல், தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் பொறியியல் படித்துள்ளார். பின்னர் முதுநிலையையும் ஆராய்ச்சி படிப்பையும் சென்னை ஐஐடியில் முடித்த வீரமுத்துவேல், தொழிற்கல்வியிலிருந்து ஆராய்ச்சி படிப்பு வரை வெவ்வேறு வகையான சூழல்களோடு வளர்ந்தார்.

சென்னை ஐஐடியின் ஏரோ ஸ்பேஸ் துறையின் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வீரமுத்துவேலுக்கு 1989இல் இஸ்ரோவின் விஞ்ஞானியாகும் வாய்ப்பு கிடைத்தது. டிப்ளமோவில் இருந்து தன் கல்வியை கற்றிருந்ததால், நுணுக்கமான சில வன்பொருள் வேலைகளையும் இழுத்து போட்டு செய்யும் தேடல் ஆரம்பத்திலிருந்தே இவரிடம் இருந்துள்ளது.

விஞ்ஞானி வீர முத்துவேல்
விஞ்ஞானி வீர முத்துவேல்

இஸ்ரோவில் பணியாற்றும் போது பல்வேறு நிறுவனங்களிலும் பல்வேறு நாடுகளிலும் இருந்து இவருக்கு அழைப்பு வந்தது. இருந்தும் இஸ்ரோவில் பணியாற்றுவது தனது கனவு எனக் கூறி தொடர்ச்சியாக தனது பணியை செவ்வனே செய்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில், விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான முறை குறித்த கட்டுரையை சமர்ப்பித்திருந்தார். அவரது ஆய்வுக் கட்டுரை குறித்தான சோதனை பெங்களூரில் உள்ள யு.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதிக்கப்பட்டது. அப்போது எலக்ட்ரானிக் தொகுப்பின் அதிர்வு சோதனை குறித்தான தொழில்நுட்பம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. ஏனெனில் இவர் கண்டறிந்துள்ள இந்த குறிப்பிட்ட தொழில்நுட்பம் நிலவில் லேண்டரை தரை இறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

விஞ்ஞானி வீர முத்துவேல்
சந்திரயான் 3: லேண்டர் மற்றும் ரோவரின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
விஞ்ஞானி வீர முத்துவேல்
விஞ்ஞானி வீர முத்துவேல்

அதிர்வுகளை கட்டுப்படுத்தும் இவரது சோதனை முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டதோடு சந்திராயன் 3 திட்ட இயக்குனராகவும் இவரை மாற்றியது. இஸ்ரோவில் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளிலும், திட்டங்களிலும் பணியாற்றி வந்த வீரமுத்துவேல் கடந்த 2019 ஆம் வருடம் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

சந்திராயன் 2 திட்ட இயக்குனராக வனிதா இருந்த நிலையில் அவர் இஸ்ரோவின் தரவு மேலாண்மை துறையின் துணை இயக்குனராக மாற்றப்பட்டார். விஞ்ஞானி வீர முத்துவேலுக்கு கீழே 29 துணை இயக்குனர்களும் அவர்களுக்கு கீழே எண்ணற்ற விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் சந்திரயான் 3 திட்டம்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையான ஆய்வு சோதனை ஆகியவற்றிற்குப் பிறகு சந்திரயான் விண்கலம் முழு வடிவத்தை அடைந்துள்ளது. சந்திரயான் 2 திட்டத்தில் கற்ற பாடத்திலிருந்து வடிவமைப்பு ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சந்திரயான் 3 திட்டம் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது.

விஞ்ஞானி வீர முத்துவேல்
விஞ்ஞானி வீர முத்துவேல்

மெய் நிகர் தொழில்நுட்பம், மென்பொருள் வன்பொருள் குறித்தான அனைத்து துறைகளிலும் ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட வீர முத்துவேல், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வகத்திலேயே பல மணி நேரத்தை செலவிட்டதாக கூறப்படுகிறது. அவரோடு சேர்ந்து நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பு தான் இந்தியாவின் நிலவு கனவை நிறைவேற்ற போகிறது. இந்தியாவின் நிலவு கனவை நிறைவேற்றும் பொறுப்பில் தொடர்ச்சியாக தமிழர்கள் தலைமை தாங்குவது நமக்கும் பெருமைதானே!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com