ஆதித்யா L1-ன் புதிய வெற்றி.. 9.2 லட்சம் கி.மீ பயணம்! மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்த ISRO!
ஆதித்யா எல் ஒன் விண்கலம் பூமியில் இருந்து 9 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து சென்று கொண்டிருப்பதாகவும் பூமியை சுற்றியுள்ள விசைகளின் தாக்கத்தில் இருந்து அது விடுபட்டுவிட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆராய ஆதித்யா எல் ஒன் விண்கலத்தை கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி இஸ்ரோ அனுப்பியது. அந்த விண்கலம் புவியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு தற்போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி சென்று கொண்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக ஆதித்யா எல்1 செய்த தரமான சம்பவம்!
இஸ்ரோ விண்கலம் ஒன்று புவியின் தாக்கத்திற்கு அப்பால் செல்வது இது 2ஆவது முறை எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கெனவே செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலமும் புவி விசைகளின் தாக்கத்தை கடந்து பயணித்துள்ளதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.
லெக்ராஞ்சியன் புள்ளி பகுதியில் இருந்து ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா விண்கலம் சூரியன் குறித்த பல்வேறு தகவல்களை சேகரித்து அனுப்பும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது. ஆதித்யா எல் ஒன் விண்கலம் தனது இலக்கு தொலைவை அடைய சுமார் 6 லட்சம் கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியுள்ளது.