\

“லேண்டரிலிருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது” -இஸ்ரோ தலைவர் சிவன்

“லேண்டரிலிருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது” -இஸ்ரோ தலைவர் சிவன்
Published on

நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியது. திட்டமிட்டப்படி இந்த விண்கலம் பூமியை சுற்றி வந்த நிலையில் அதன் வேகம் அதிகரிக்கப்பட்டு படிப்படியாக பாதை திருப்பிவிடப்பட்டது. பூமியில் இருந்து அதிக தொலைவு கொண்ட பாதைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திரயான்-2 விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்த மாதம் 2ஆம் தேதி ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் விக்ரம் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறக்கும் பணி தொடங்கப்பட்டது.லேண்டரின் வேகத்தை விஞ்ஞானிகள் படிப்படியாக குறைத்து வந்தனர். எனினும் லேண்டரிலிருந்து சிக்னல் வரவில்லை.  

இதனையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் தகவலை வெளியிட்டார். அதில், “நிலவிலிருந்து 2.1 கிலோமீட்டர் தூரத்தில் லேண்டர் இருந்தப் போது அதன் தகவல் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் தரவுகளை வைத்து விஞ்ஞானிகள் தகவல் துண்டிப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com