”இன்ஸ்டா யாரையும் அடிமையாக்குவதில்லை” - நீதிமன்றத்தில் வாதம் வைத்த ஆடம் மொஸேரி!
இன்ஸ்டாகிராம் பயன்பாடு என்பது மருத்துவரீதியாக யாரையும் அடிமையாக்குவதில்லை என்று அதன் தலைவர் ஆடம் மொஸேரி தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம், யூடியூப் தளங்கள் மருத்துவரீதியாக அடிமையாக்குகிறது என்று அவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, கலிபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்டாகிராம் நிறுவனத் தலைவர் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது, “இன்ஸ்டாகிராம் பயன்பாடு யாரையும் மருத்துவரீதியாக அடிமைப்படுத்துவதில்லை” என்றார். மேலும் அவர், “பயனர்கள் தாங்கள் விரும்பியதைவிட அதிக நேரம் இன்ஸ்டாகிராமில் செலவிடுவது சிக்கலான விஷயம்தான்” என்று அவர் ஒப்புக்கொண்டார். இது, ஒரு நெட்ஃப்ளிக்ஸ் தொடரைத் தொடர்ந்து பார்ப்பது அல்லது நீண்டநேரம் டிவி பார்ப்பது போன்ற ஒரு பழக்கத்துடன் அவர் ஒப்பிட்டு தனது வாதத்தை முன்வைத்தார்.
சமூக ஊடகத் தளங்கள் மருத்துவரீதியாக அடிமையாக்கும் அம்சங்களுடன் தங்கள் செயலிகளை உருவாக்கியுள்ளன. இது தனது மன நலனைப் பாதித்துள்ளது என்று கூறி கேலே என்ற 20 வயது பெண் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். விசாரணையில் உள்ள இதேபோன்ற 1,500 வழக்குகளில் இந்த வழக்கும் ஒன்றாகும்.
