2019 ஆகஸ்ட்டுடன் நிறுத்தப்படுகிறது கூகுள் ப்ளஸ்..!
கூகுள் ப்ளஸ் என்ற சமூக வலையமைப்பு தளத்தை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை கூகுள் தொடங்கியது. பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் அதிகம் ஆர்வம் காட்டாத பயனாளர்கள் பின்னர் கூகுள் ப்ளஸை பயன்படுத்த தொடங்கினர். ஆனால் சமூக வலைதளங்களின் ராஜாவாக இருக்கும் பேஸ்புக், ட்விட்டர் ஆகியவவைகளுக்கு கூகுள் ப்ளசால் நேரடி போட்டி கொடுக்க முடியவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகம் ஒன்றில் கூகுள் ப்ளஸ் மூலம் அதன் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக செய்தி வெளியானது. இந்த செய்தி இணைய உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதற்குள்ளேயே கூகுள் பிளஸ் என்ற சமூக வலையமைப்பு தளத்தை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் 5லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் கூகுள் ப்ளஸ் வலை தளத்தில் இருந்து திருடப்பட்டது தெரியவந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்திலேயே இந்த பிரச்னை தெரிய வந்தாலும் அப்போது கூகுள் நிறுவனம் இது குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. சுமார் 438 வேறு செயலிகள் கூகுள் ப்ளஸில் இருந்து பயனாளர்களின் பெயர், ஈ மெயில் முகவரி, பாலினம், பணி செய்யுமிடம் போன்ற தகவல்களை திருடியுள்ளது தெரியவந்ததை அடுத்து கூகுள் இந்த முடிவை எடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் கூகுள் பிளஸ் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 10 மாதங்களுக்குள் பயனாளர்கள் தங்களின் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.