தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டுவிட்ட நிலையில், அதனை பயன்படுத்தி நடத்தப்படும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம், Whatsapp போன்றவற்றின் மூலம் நடக்கும் குற்றங்கள், மோசடிகள் குறித்து, அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டிய வழிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒட்டுமொத்த உலக நிகழ்வுகளையும் ஒரு சில நொடிகளுக்குள் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து கொடுத்துவிடுகிறது ஸ்மார்ட் போன் உலகம். ஒவ்வொரு செல்போன் ஆப்கள் மூலமாகவும், தொலை தொடர்பு, செய்தி பரிமாற்றம் எளிதாகிவிட்டது. வெகுதொலைவில் இருப்பவர்களை எளிதில் தொடர்புகொள்ளவும், பொழுது போக்குக்காகவும் கொண்டுவரப்பட்ட செல்போன் ஆப்கள், குற்றங்களை எளிதாக செய்யும் களமாகவும் மாறியுள்ளன.
இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆப் ஆன இன்ஸ்டாகிராம் , போதைப்பொருள் விற்பனை செய்வோரால் தவறான வழியில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இன்ஸ்டாகிராம் மூலமாக செய்யப்படும் அழைப்புகள் internet call போன்றதாக இருப்பதால், எளிதில் track செய்துவிட முடியாது என்று பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு பலர் வருகின்றனர்.
ஒரு அக்கவுண்டில், தான் டிராக் செய்யப்படுகிறோம் என்று தெரிந்தால், வேறு அக்கவுண்டை தொடங்கி போதை பொருட்களை விற்கின்றனர். உதாரணமாக, கோவையில் சமீபத்தில் நிகழ்ந்த கொலை குற்றங்கள் தொடர்புடைய நபர்கள் பலரும் இன்ஸ்டாகிராம் வாயிலாக அழைப்புகளை மேற்கொண்டு சதி திட்டங்களை தீட்டியது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், கல்லூரி மாணவர்கள் பலரையும் இன்ஸ்டாகிராம் வாயிலாகவே தொடர்பு கொண்டு போதை பொருள்களை கைமாற்றியுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் ஒருவரின் instagram பெயரிலேயே மோசடி நபர்களும் அக்கவுண்ட்டுகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற சமயங்களில், சக நண்பர்கள் ரிப்போர்ட் செய்வதன் மூலமாக மோசடி அக்கவுண்ட்டுகளை நீக்க முடியும் என்று சைபர் கிரைம் எக்ஸ்பெர்ட்டுகள் கூறுகின்றனர். சில சமயங்களில், இப்படி ரிப்போர்ட் செய்ய முடியாமல் போனால், இன்ஸ்டாகிராம் Impersonation என கூகுளில் சர்ச் செய்து, கிடைக்கும் link-இல் விவரங்களை குறிப்பிட்டு தற்காத்துக் கொள்ளலாம்.
இளைஞர்களிடம் இன்ஸ்டாகிராமில் மோசடி என்றால், முதியவர்கள் மற்றும் தொழில்நுட்பம் பற்றி பெரிதாக தெரியாதவர்களிடம் Whatsappமூலம் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது போன்ற நபர்களிடம், செல்போன்களை ஒரு அழைப்பை மேற்கொண்டுவிட்டு தருவதாக கூறி, அந்த எண்ணிற்கு வரும் OTPஐக்கொண்டு Whatsapp Accountஐ திறந்து அந்த நபரின் பெயரில் பல மோசடிகளை சைபர் குற்றவாளிகள் மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் தங்கள் எண்ணில், வேறு யாரும் ஏதாவது செயலியை பயன்படுத்துகிறார்களா என்பதை தெரிந்துகொள்ள மத்திய அரசின் TAFCOP என்ற இணையதள பக்கத்தில் செல்போன் எண்ணை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற மோசடிகள் அல்லாது, நமது குடும்ப நபர்கள் அழைப்பது போலவே, அவர்கள் அது எண்ணிலிருந்து நமக்கு அழைப்புகள் வருவது போலவும் செயலிகளைக் கொண்டு பண மோசடி நடைபெற்று வருவதாகவும் சைபர் கிரைம் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.