UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம்.. பாஜக அரசுக்கு காங்கிரஸ் கடும் விமர்சனம்!
மத்திய அரசு 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிக யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 மற்றும் 0.4% வரை கட்டணம், அதிகபட்சம் ரூ.300 என நிர்ணயித்துள்ளது. தனிநபர் இடையேயான பரிவர்த்தனைகள் விலக்கு பெறும் நிலையில், இந்த முடிவை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து, நாடாளுமன்ற விவாதமின்றி சட்டத் திருத்தம் செய்து கட்டணம் வசூலிக்க தொடங்கியதாக குற்றம்சாட்டுகிறது.
2000 ரூபாய்க்கு மேலான வணிக பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அறிவிப்பின் படி, “தனிநபர்களுக்கு இடையேயான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. அதேவேளையில் ரயில்வே, தொலைத்தொடர்பு சேவைகள், காப்பீடு, எரிபொருள் போன்ற குறிப்பிட்ட வணிக பிரிவுகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக ரூ.2,000-க்கு மேற்பட்ட வர்த்தக UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும் என்றும், ஒரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச வர்த்தக கட்டணமாக ரூ.300-ஆக நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதகு காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். 2,000 ரூபாய் வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டண விலக்கு அளித்து மத்திய நிதி அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ரமேஷ். நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத் திருத்தம் மூலம் யூபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், வெளிப்படைத்தன்மை இன்றி யூபிஐ பயனாளிகளின் நம்பிக்கையை அரசு உடைத்துள்ளதாக ரமேஷ் விமர்சித்துள்ளார், அமெரிக்க நிறுவனங்களின் டிஜிட்டல் சந்தைக்காக அதிபர் ட்ரம்ப்பை திருப்திப்படுத்தவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
