விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
சந்திரயான்-2 லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரோவுடன் கைகோர்த்த அமெரிக்காவின் நாசாவும், ஹலோ விக்ரம் என குறுஞ்செய்தி அனுப்பி வைத்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.
நாசா, 2009 ஆம் ஆண்டு அனுப்பிய புலனாய்வு ஆர்பிட்டர் நிலவைச்சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இது விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேலே கடந்து சென்றது. அந்த நேரத்தில் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பவும், லேண்டருடன் சமிக்ஞை ஏற்படுத்தவும் முயற்சி செய்யப்படும் எனவும் நாசா தெரிவித்தது. எனினும் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும் சமிக்ஞை மூலமாகவும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா கூறியுள்ளது.
இந்நிலையில் விக்ரம் லேண்டரை தொடர்புக் கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “விக்ரம் லேண்டரை தொடர்புக் கொள்ள முடியவில்லை. எனினும் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆர்பிட்டரில் உள்ள 8 தொழில்நுட்ப சாதனங்களும் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. ஆகவே சந்திரயான்-2 ஆர்பிட்டர் திட்டமிட்டபடி அதன் ஆய்வுகளை மேற்கொள்ளும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்திற்கு நாங்கள் தற்போது முன்னுரிமை கொடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.