சந்திராயன்-II விண்கலம் வரும் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியா முதன்முறையாக நிலவிற்கு சந்திராயன்-I விண்கலத்தை 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம் நிலவின் தரைபகுதியிலிருந்து 100கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதனையடுத்து சந்திராயன்-I விண்கலம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்தது. அதன்பின்னர் இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திராயன்-II விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது.
சந்திராயன்-II விண்கலத்தில் 3 முக்கிய தொழில்நுட்பங்கள் அனுப்பப்படவுள்ளன. அவை ஆர்பிடர்(Orbiter), லண்டர்(Lander), ரோவர்(Rover). ஆர்பிடர் மற்றும் லண்டர் இணைக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-IIIயின் மூலம் ஏவப்படும். லண்டரினுள் ரோவர் பொருத்தப்படவுள்ளது. சந்திராயன்-II பூமியிலிருந்து ஏவப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும். அதன் பின்னர் லண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும். நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தவுள்ளது.
இந்தச் சாதனங்கள் அனைத்தும் வரும் ஜூலை மாததிற்குள் தயார்நிலையில் வரும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அத்துடன் வரும் ஜூலை மாதம் 9ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதிக்குள் சந்திராயன்-II விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.