சர்வதேச அளவில் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்கள் விற்பனையில் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 6 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 9 சதவிகிதம் அதிகமாகும். இந்நிறுவனத்தின் நிகர லாபமும் இதுவரை இல்லாத வகையில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள டிம் குக், தங்கள் பங்குதாரரான சால்காப் நிறுவனம் சென்னையில் மூடப்பட்டுள்ள நோக்கியா தொழிற்சாலையைப் பயன்படுத்தி, வரும் மார்ச் மாதம் முதல் உற்பத்தியை தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.