பப்ளிக் வைஃபை பயன்படுத்துகிறீர்களா? உங்கள் வங்கிப் பணம் திருடு போகலாம்... எச்சரிக்கை
இந்தியாவில் பொது இடங்களில் செயல்பாட்டில் உள்ள பப்ளிக் வைஃபையைப் பயன்படுத்துவோரில் 96 சதவீதம் பேர் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக இணைய பாதுகாப்பு வழங்கும் ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிமாண்டெக் எனும் நிறுவனம் ’நார்டன் வைஃபை ரிஸ்க் ரிப்போர்ட் 2017’ என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பொது இடங்களில் வைஃபை வசதியைப் பயன்படுத்துபவர்களில் 96 சதவீதம் பேரின் வங்கிக் கணக்கு குறித்த தகவல்கள், தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை திருடப்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.
பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வைஃபை வசதிகள் பெரியளவிலான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருப்பதில்லை என்றும், அதனால், சைபர் கிரிமினல்கள் இந்த வைஃபை வழியாக பயனாளர்களின் தகவல்களை மிக எளிதாக திருடும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, நம்பகத்தன்மை இல்லாத செல்போன் செயலிகள் மூலமாகவும் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும் அந்த அறிக்கையில் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் 31 சதவீதம் பேர் பப்ளிக் வைஃபை வசதியைப் பயன்படுத்தி ஆபாச இணையதளங்கள் அல்லது சட்டவிரோதமாக செயல்படும் இணையதளங்களைப் பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் இருந்து காத்துக் கொள்ள விபிஎன் (VPN) வசதியைப் பயன்படுத்தலாம் என்று அந்த அறிக்கை ஆலோசனை தெரிவித்துள்ளது. இணையதளங்களின் முகவரியில் ஹெச்டிடிபிஎஸ் (HTTPS) பாதுகாப்பு வசதி இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுமாறும் நார்டன் ரிப்போர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.
பொது வைஃபை மூலம் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்கள் திருடப்படும் பட்சத்தில், அதன் மூலம் நமது கணக்கில் உள்ள பணமும் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே பப்ளிக் வைஃபையைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கை தேவை. பொதுவாக பப்ளிக் வைஃபையைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.