நிலவின் தென்துருவத்தை ஆய்வுசெய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 நாளை அதிகாலை 1.30 மணியளவில் தரையிறங்குகிறது.
கடந்த ஜுலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் அருகில் சுற்றிவருகிறது. இது நாளை அதிகாலை 1.30 மணிக்கு, மற்ற எந்தவொரு நாடுகளின் விண்கலமும் சென்றிராத நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்க உள்ளது. இதனை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து பிரதமர் மோடி நேரடியாக பார்வையிட உள்ளார்.
அவருடன் அமர்ந்து நேரில் காட்சியை காண மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 2 மாணவர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 70 மாணவர்கள், பிரதமர் மோடியுடன் அமர்ந்து சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதை காண உள்ளனர்.