11 நாட்களில் 271 வழக்குகள் .. சென்னையில் சட்டவிரோத மதுவிற்பனையும் காவல்துறை நடவடிக்கையும்

11 நாட்களில் 271 வழக்குகள் .. சென்னையில் சட்டவிரோத மதுவிற்பனையும் காவல்துறை நடவடிக்கையும்

11 நாட்களில் 271 வழக்குகள் .. சென்னையில் சட்டவிரோத மதுவிற்பனையும் காவல்துறை நடவடிக்கையும்

சாராயம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து யூடியூப்பில் பார்த்து வீட்டில் வைத்தே பிராந்தி விஸ்கி தயாரித்து விற்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதேபோல,  சென்னை அரும்பாக்கத்தில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் மட்டுமே கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை 11 நாட்களில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 324 குற்றவாளிகள் போலீஸ் பிடியில் விசாரணையில் உள்ளனர். 321 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 11 நாட்களில் மட்டும் இதுவரை ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சென்னையிலும் தயாரிக்கப்பட்ட சுமார் 4,176.57 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 19 இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் 2, நான்கு சக்கர வாகனங்கள் 8 மற்றும் கண்டெய்னர் லாரிகள் 2 என மொத்தம் 31 சாராய வாகனங்களை போலீசார் கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து பறிமுதல் செய்து மீட்டுள்ளனர். ஒரே வாரத்தில் சென்னை போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதைபோல, தமிழகம் முழுவதும் இந்த மாதம் 1ம்தேதி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் மொத்தம் 25461 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 92 வாகனங்களும், 2ம்தேதி சோதனையின் போது மொத்தம் 23892 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 83 வாகனங்களும், 3ம்தேதி  சோதனையின் போது மொத்தம் 15262 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 75 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com