மனநலம் பாதித்த தாயை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை.. !
சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது இறுதிச் சடங்கிற்கு தேவையான பணத்தை கூகுள் பே (GOOGLE PAY)மூலம் தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார் அந்த இளைஞர்.
விக்னேஷ்வரன் என்பவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட தாய் சுந்தரவல்லியுடன் சென்னை தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டிற்குள் சுந்தரவல்லி உயிரிழந்து கிடந்திருக்கிறார். விக்னேஷ்வரன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்து விட்டு விக்னேஷ்வரன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது. விக்னேஷ்வரன் எழுதிய தற்கொலை கடிதம் ஒன்றையும் காவலர்கள் கைப்பற்றியுள்ளனர். அதில் தங்கள் உயிரிழப்பிற்கு யாரும் காரணமல்ல, பயம் ஒரு கொடிய நோய் என்று எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது.
உயிரிழப்பதற்கு முன் தனது நண்பருக்கு GOOGLE PAY மூலம் ஆறாயிரத்து 500 ரூபாய் அனுப்பியிருக்கிறார் விக்னேஷ்வரன். எதற்கு என நண்பர் கேட்க, ஒரு நல்ல காரியத்திற்கு என்று கூறியிருக்கிறார் அவர். விக்னேஷ்வரன் தனது இறுதிச் சடங்கிற்காகத்தான் பணம் அனுப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக காவலர்கள் கூறினர்.