சாலைத் தடுப்பை இழுத்து சென்றபடி பைக் ஓட்டும் இளைஞர்கள்: வைரலாகும் வீடியோ
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், வாகன சோதனைக்காகவும் காவல் துறையால் பயன்படுத்தப்படும் தடுப்பு பலகையை இழுத்துச் சென்றபடி இளைஞர்கள் பைக் ஓட்டிய காட்சி வலைத்தளங்களில் பரவி வருகிறது.
புத்தாண்டை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். அதேசமயம் பொதுமக்களுக்கு பாதுகாப்பும் முக்கியம். இதனால் புத்தாண்டை கொண்டாடும் மக்களுக்காக காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு செய்திருந்தனர். அதேபோல போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், வாகன சோதனைக்காகவும் பல இடங்களில் தடுப்பு பலகையை வைத்திருந்தனர். இந்நிலையில் அந்த தடுப்பு பலகையை இழுத்துச் சென்றபடி இளைஞர்கள் பைக் ஓட்டிய காட்சி வலைத் தளங்களில் பரவி வருகிறது.
புத்தாண்டு இரவில் நடந்ததாக கருதப்படும் இந்த காட்சி மெரினா கடற்கரைச் சாலையிலும், மற்றொரு இடத்திலும் நடந்திருப்பதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் காட்சியை வைத்து வாகன எண் பற்றியும், விதிமீறலில் ஈடுபட்டவர்கள் யார் என்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதைச் செய்தவர்களை கண்டுபிடித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.