சென்னையில் கட்டுப்பாட்டை மீறி பைக் சாகசம் - பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்
சென்னை மெரினா சாலையில் போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவோர் மற்றும் பைக் சாகச பந்தயத்தில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னையின் முக்கிய சாலைகளான மெரினா காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட பல சாலைகளில் இரவு நேரங்களில், வாகன தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் போலீசாரின் தடையை மீறி 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்றிரவு மெரினா காமராஜர் சாலையில், பைக் சாகச பந்தயத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களில் சாலைகளில் வீலிங் செய்து கொண்டே செல்கின்றனர். இதனால் இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும், தலைமை செயலகத்தில் பட்ஜெட் கூட்டம் நடைபெறுவதால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செல்லும் முக்கிய சாலையான காமராஜர் சாலையில் இரவு நேரத்தில் ஒரு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். சட்டவிரோதமாக இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை, வீடியோவில் பதிவான அடையாளங்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.