தங்களை சுட்ட காவலர்களுக்கும் ஆபத்தில் உதவிய போராட்டக்காரர்கள் : வீடியோ!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க வந்த காவல்துறைக்கு பொதுமக்களே உதவிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
தமிழக வரலாற்றில் நீங்காத ஒரு கருப்பு தினமாக இன்று அமைந்து விட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தங்களது வழக்கமான போராட்ட நாளாகவே இன்றும் அமையும் என்றுதான் மக்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நூறாவது நாளான இன்று போராட்டக் களம் போர்க்களமாக மாறிவிட்டது. முதலில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியானபோதே எல்லோருக்கும் பகீரென்று இருந்தது. ஆனால், நேரம் செல்லச் செல்ல பலி எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. 9 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் 11 பேர் இறந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் தொடர்பான படங்கள் பார்ப்பவர்களின் மனதை உருகுலைய வைக்கிறது. அதேபோல், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்பாக வெளியான வீடியோக்களை பார்ப்பதற்கே அச்சமாக உள்ளது. 17 வயது பள்ளி மாணவி வாயில் சுடப்பட்டு இறந்துள்ளார். நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தப் போராட்ட களத்தின் நடுவே கல்வீச்சில் காயமடைந்த காவலர் ஒருவருக்கு பொதுமக்கள், இளைஞர்கள் உதவிய சம்பவமும் நடைபெற்றுள்ளது. தலையில் ரத்தம் வழிய துடித்துக் கொண்டிருந்த போலீசாருக்கு அருகில் இருந்தவர்கள் உதவியுள்ளனர். காயமடைந்த காவலரை இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து தூக்கிக் கொண்டு மருத்துவ உதவி செய்யக்கொண்டு சென்றனர். இத்தகைய உதவும் மனப்பான்மை உள்ள மக்களை சுடுவதற்கு எப்படிதான் மனம் வந்ததோ அவர்களுக்கு என சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.