
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு என்பவருடைய மனைவி வள்ளியம்மாள் (104). இவர், வயது முதிர்வின் காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். இந்த நிலையில் அதே ஊரில் வசித்து வரும் வள்ளியம்மாளின் தம்பி துரைசாமி (102) என்பவருக்கு வள்ளியம்மாள் உயிரிழந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அக்கா உயிரிழந்த தகவல் அறிந்த அவர் ஒரே இடத்தில் வேதனையில் அமர்ந்திருந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அமர்ந்திருந்த இடத்திலேயே துரைசாமி மயங்கி விழுந்து அவரும் உயிரிழந்தார். அக்கா உயிரிழந்த அதிர்ச்சியில் தம்பியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த இருவரது உடல்களும் இன்று மாலை அதே ஊரில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.