சாலையில் சரிந்துவிழுந்த கட்சிக்கொடி - விபத்தில் சிக்கிய இளம்பெண்
கோவையில் கட்சி கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், பெண் நிலை தடுமாரி அவர் மீது லாரியில் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று காலை பணிக்கு செல்வதற்காக, அனுராதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் கோல்டுவின்ஸ் பகுதி வழியே செல்லும்போது எதிர்பாராதவிதமாக கட்சி கொடி கம்பம் சரிந்து விழுந்துள்ளது. அதைத் தவிர்ப்பதற்காக அவர் சடன் பிரேக் போட்டதில் வண்டி சறுக்கி கீழே விழுந்தவுடன், அந்த வழியே வந்த லாரி அனுராதாவின் கால் மீது ஏறியதாக கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கால்களில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள கட்சி பிரமுகர் ஒருவரின் இல்ல திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கட்சி கொடி கம்பங்களும் வைக்கப்பட்டிருந்தன. அந்த கொடி கம்பம் சரிந்து விழுந்ததே விபத்திற்கு காரணமெனவும், அதனை காவல் துறையினர் மறைப்பதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதிமுக கொடிக் கம்பம் மோதியதில்தான் விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.