மனைவி கொடுத்த புகார்: காவல்நிலையம் முன்பு தீக்குளித்த இளைஞர்..!
திருப்பூரில் குடும்ப பிரச்னை காரணமாக விசாரணைக்காக வந்த இளைஞர் காவல்நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
திருப்பூர் மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவருக்கும் புவவேஸ்வரி என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே அசோக்குமார் கடந்த சில நாட்களாக குடித்துவிட்டு குடும்ப தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக புவனேஸ்வரி வீட்டைச் சேர்ந்தவர்கள் பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தபுகாரின் அடிப்படையில் விசாரணைக்காக அசோக்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்தனர். இந்நிலையில் விசாரணைக்காக வந்த அசோக்குமார், காவல்நிலைய வளாகத்தில் உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரின் மீது தண்ணீர் ஊற்றி அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அசோக்குமார் 60 சதவீத காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அசோக்குமாரை காப்பாற்ற முயன்ற மகளிர் காவலர் செவ்வந்தி லேசான காயம் ஏற்பட்டது.

