தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநாள் திடீர் மரணம்: மதுரை இளைஞர் இறப்பு குறித்து ஆய்வு
மதுரையில் நேற்று கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் இன்று உயிரிழந்துள்ளார். உடற்கூராய்வு முடிந்த பின்னர் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை புது விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான 29 வயது இளைஞர் ஆண்ட்ரூ சைமன் வீட்டிலிருந்து பணியாற்றி வந்துள்ளார். இவரும் இவரது மனைவியும் நேற்று மதியம் இரண்டு மணியளவில் சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஊசி செலுத்திவிட்டு மையத்தில் காத்திருந்தபோது அவருக்கு எந்தவித பக்கவிளைவுகளும் வெளிப்படவில்லை.
பின்னர் இன்று காலை 8:30 மணி அளவில் கழிப்பறைக்கு சென்றபோது சுவாசக் கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காலை 10:45 மணிக்கு அழைத்து வந்தபோது அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு சர்க்கரை நோய் இருந்து கடந்த 6 மாதமாக சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்துள்ளார். அவருக்கு வேறெந்த இணை நோய்களும் இல்லை. மது, புகை பழக்கங்களும் இல்லாத நிலையில் உடற்கூராய்வு முடிந்த பின்னரே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.