“என் மாமா குறித்து நீங்கள்தான் தகவல் சொன்னீங்க”- 3 பேரை கத்தியால் வெட்டிய மைத்துனர்..!
சென்னை எண்ணூரில் போதையில் 3 பேரை கத்தியால் வெட்டிவிட்டு ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை எண்ணூரில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் பாண்டியன். பிரபல ரவுடியான இவரை கடந்த 22-ஆம் தேதி 10 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. பாண்டியன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோதே இந்த கொலை சம்பவம் நடைபெற்றது. இந்த கொலை தொடர்பாக 6 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு பாண்டியனின் மைத்துனரான தமிழ் என்பவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு அப்பகுதியில் சுற்றியுள்ளார். பின்னர் தனது மாமாவை கொலை செய்தவர்களுக்கு நீங்கள்தான் தகவல் கொடுத்தீர்கள் எனக் கூறி, சுனாமி குடியிருப்பில் உள்ள முருகன் ஹரிகிருஷ்ணன் மற்றும் தினேஷ் ஆகியோரை கத்தியால் வெட்டிவிட்டு ரகளையில் ஈடுபட்டார். இதில் வெட்டுக் காயமடைந்த 3 பேரும் தற்போது அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரகளையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.