செய்தியாளர் - ரமேஷ்
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் மங்கையர்கரசி (29). இவர் தனது இருசக்கர வாகனத்தில் தென்காசிக்கு சென்றுள்ளார். தொடர்ந்து, மீண்டும் அதே வாகனத்தில் சென்னைக்கு திரும்பியுள்ளார். சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது மேலூரில் இருந்து மதுரைக்கு சென்ற தனியார் பேருந்து, சாலையில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
மங்கையர்கரசி வாகனத்தில் வேகமாக சென்ற நிலையில், பேருந்தும் சற்று வேகமாகவே திரும்பியுள்ளது. விபத்தின்போது பிரேக் பிடித்த நிலையில், பைக்கை மோதியபிறகே பேருந்து நின்றுள்ளது. இதற்கிடையே, விபத்தில் சிக்கி உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்த மங்கையர்கரசி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிக்கொள்ளும் அதிர்ச்சி சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.