“இயற்கை உபாதைக்கு சென்றால் கூட செல்போனில் படம் பிடித்து மிரட்டல்” -இளம்பெண் பாலியல் புகார்
தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் திருச்சி டி.ஐ.ஜி ஆனி விஜயாவிடம் கண்ணீருடன் கோரிக்கை மனு கொடுத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை பூஞ்சோலை பகுதியை சேர்ந்தவர்கள் ஜோசப் - அன்னமேரி. இவருடைய மகள் பிரியா (26). பெங்களூருவில் ஹோம் நர்சிங் துறையில் பணியாற்றினார். பின்னர், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கெனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்கள் குடும்பத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த செங்கோடன் - மல்லிகா ஆகியோரின் குடும்பத்திற்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், செங்கோடன் - மல்லிகா தம்பதியினரின் இளைய மகன் சின்னண்ணன்(28) பிரியாவிற்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பிரியாவின் வீடு காட்டுப் பகுதியில் இருப்பதால் அப்பகுதியில் கழிவறைக்கு செல்லும்போது சின்னண்ணன் பிரியாவை செல்போன் கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியாவை சின்னண்ணன் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சியிலும் ஈடுபட்டதாக தெரிகிறது. பிரியா கூச்சலிட அங்கிருந்து சின்னண்ணன் தப்பித்து ஓடியுள்ளார். அப்போது பிரியாவிற்கு கை, கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
பிரியாவை மீட்ட உறவினர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில், சின்னண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் பிரியா திருச்சி டி.ஐ.ஜி ஆனி விஜயாவிடம் கண்ணீருடன் கோரிக்கை மனு கொடுத்தார்.