யமஹா நிறுவன தொழிலாளர்கள் மனிதசங்கிலி போராட்டம்
தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததற்குக் கண்டனம் தெரிவித்து யமஹா நிறுவன தொழிலாளர்கள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள யமஹா தொழிற்சாலை ஊழியர்கள் 6ஆவது நாளாக மனித சங்கிலி போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர். யமஹா இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 6ஆவது நாளாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சங்கம் தொடங்கியதால் இரண்டு தொழிலாளர்களை நீக்கியதற்குக் கண்டனம் தெரிவித்தும், அவர்களை மீண்டும் பணியமர்த்தக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 5 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடர்ந்த தொழிலாளர்கள் இன்று மனிதசங்கிலி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தொழிலாளர்களிடம் நிர்வாகம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.