ஆசை ஆசையாய் இருந்த ஆசையை அனுபவித்து மகிழ்ந்த பெண்கள் - என்ன ஆசை அது?

ஆசை ஆசையாய் இருந்த ஆசையை அனுபவித்து மகிழ்ந்த பெண்கள் - என்ன ஆசை அது?
ஆசை ஆசையாய் இருந்த ஆசையை அனுபவித்து மகிழ்ந்த பெண்கள் - என்ன ஆசை அது?

விமானத்தில் பறந்து ரயிலில் பயணித்து சென்னையை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற தங்களது நீண்ட நாள் கனவை சுயஉதவிக் குழு சேமிப்பு பணத்தின் மூலம் கிடைத்த வட்டியில் கூடலூர் பெண்கள் நனவாக்கி மகிழ்ந்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புத்தூர்வயல் சுற்றுவட்டார பகுதியைச் சேர்த்த பெண்கள் SHALOM சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவில் 50 வயதை கடந்த பெண்களும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில். இந்த குழுவில் உள்ள பெண்கள் விமானத்தில் பறந்தும், ரயிலில் பயணித்தும் சென்னையை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாட்களாக ஆசை இருந்திருக்கிறது.

அதேபோல சென்னையில் உள்ள மெட்ரோ ரயிலில் பயணிக்கவும், மெரினா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை கண்டு ரசிப்பதோடு விதவிதமான கடல் உணவுகளையும் சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக நீண்ட நாட்களாக திட்டமிட்ட பெண்கள் குழுவினர், தங்களது சுய உதவிக் குழுவில் உள்ள சேமிப்பு பணத்தில் வருடந்தோறும் கிடைக்கக் கூடிய வட்டி தொகையில் தங்களது ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்தனர்.

இதையடுத்து தாங்கள் திட்டமிட்டபடி பணத்தை சேமித்த சுய உதவிக் குழு பெண்கள், கடந்த மாதம் 23 ஆம் தேதி தங்களது பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். கூடலூரில் இருந்து பேருந்து பயணமாக மைசூர் சென்ற இவர்கள், அங்கிருந்து சதாப்தி ரயில் மூலம் சென்னைக்கு சென்றிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து சென்னையில் தங்கிய இவர்கள் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து, தாங்கள் விரும்பிய கடல் உணவுகளையும் உண்டு மகிழ்ந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பயணித்த பெண்கள் குழுவினர், சென்னையில் இருந்து விமானம் மூலம் மீண்டும் மைசூர் வந்து அங்கிருந்து சொந்த ஊரான கூடலூருக்கு வந்துள்ளனர். இந்த மூன்று நாட்களில் நபர் ஒருவருக்கு ரூ.8500 மட்டுமே செலவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தங்களது குடும்ப உறுப்பினர்கள் யாரும் இந்த பயணத்தில் பங்கு கொள்ளாவிட்டாலும், அவர்களுடைய முழு ஒத்துழைப்பில் தங்களது கனவை நனவாக்க முடிந்ததாக பெண்கள் மகிழ்ச்சியோடு கூறினர்.

விமானத்தில் பயணித்ததும், ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணித்த அனுபவங்களை தங்களால் தற்போது வரை மறக்க முடியாத அனுபவம் எனவும் கூறினர். தற்போது தங்களுக்கு கப்பலில் பயணித்து சுற்றிப் பார்க்க ஆசை உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருவதாக கூறினர். மற்ற பெண்களுக்கு தங்களுடைய முயற்சி ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com