பாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் பெண்கள் குறித்து இடம்பெறும் காட்சிகளும் காரணமாக அமைகிறது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் "டைம்ஸ் ஆப் இந்தியா" சார்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய கனிமொழி, “ மரண தண்டனை மட்டுமே எல்லா குற்றங்களுக்கும் தீர்வாகாது, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் சமூகத்திற்கும் பொறுப்பு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் பெண்கள் குறித்து இடம்பெறும் காட்சிகளும் காரணமாக அமைகிறது. மேலும், பாலியல் கல்வி மிகவும் அவசியம். அதை அரசு கொண்டு வர வேண்டும்” என்றார் அவர்.
இதற்கடுத்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, “திரைப்படங்கள் தான் இது போன்ற குற்றங்களுக்கு காரணம் என்றால் நாம் தான் அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் போன்ற படங்களை பார்க்கிறோம். பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு சினிமாவையும், டாஸ்மாக்கையும் மட்டும் குற்றம்சாட்டாதீர்கள். சமுதாயத்தில் நடக்கும் எல்லா விதமான குற்றங்களுக்கும் சினிமா தான் காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது. உங்களிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிப்பவர்களை துணிச்சலோடு எதிர்கொள்ளுங்கள்" என்றார் அவர்.