உடற்கூராய்விற்கு எடுத்துச்செல்லப்படும் கொல்லப்பட்ட குழந்தை
உடற்கூராய்விற்கு எடுத்துச்செல்லப்படும் கொல்லப்பட்ட குழந்தைபுதியதலைமுறை

சென்னை | 2 குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து.. நெஞ்சை பதறவைக்கும் தாயின் கொடூரச் செயல்!

சென்னை கீழ்பாக்கத்தில் இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்.
Published on

சென்னை கீழ்பாக்கம் புல்லாபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் 31 வயதான திவ்யா. இவருக்கு 4.5 வயதில் ஒரு மகனும் , 1.5 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவருடன் திருமணமாகியுள்ளது. கணவனுக்கும் மனைவிக்குமிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த காரணத்தால் கடந்த 3 மாதத்துக்கு முன்பு கணவனைப் பிரிந்து தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கீழ்பாக்கம் புல்லாபுரத்திலுள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து வசிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று மதியம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திவ்யாவின் அத்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்ததால் வெகுநேரமாகக் கதவைத் தட்டியுள்ளார். ஆனால் வெகுநேரமாகக் கதவு திறக்கப்படாமல் இருக்கவே அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அனைவரும் வந்து மீண்டு கதவைத் தட்டி திவ்யாவை அழைத்துள்ளனர். அப்போது திவ்யா கழுத்தில் ரத்தம் வடிய கதவை திறந்துள்ளார் திவ்யா. இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது இரண்டு ஆண் குழந்தைகளும் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதனைக் கண்டு பேரதிர்ச்சிக்குள்ளான அவர்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்பாக்கம் காவல் துறையினர் திவ்யாவையும், உயிருக்கு போராடி கொண்டிருந்த 4.5 வயது குழந்தையையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஒன்றரை வயது குழந்தை மட்டும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துவிட்டதையடுத்து அக்குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் விசாரணையில் இரண்டு குழந்தைகளின் கழுத்தையும் அறுத்துவிட்டு அவரும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கீழ்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெருங்களத்தூரில் உள்ள கணவர் ராமகுமாரை பிடித்து விசாரணை மேற்கொள்ளவும், திவ்யாவின் செல்போன் டிஸ்ப்ளே பழுதாகி இருப்பதால் அதை சரி செய்து கடைசியாக அவர் யாருடன் செல்போன் பேசினார் என்பது குறித்த விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். முழு விசாரணைக்கு பின்னரே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையை கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா ? என்பது தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com