சென்னையில் சாப்பிடும்போது தொண்டையில் போண்டா சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு காமராஜர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன். ராயப்பேட்டையில் உள்ள டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி(45). இவர் தன் கணவருடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு
திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தை இல்லை. இந்நிலையில், நேற்று பத்மாவதியும் அவரது தாயாரும் போண்டா வாங்கி வந்துள்ளனர். அப்போது பத்மாவதி சாப்பிடும்போது தொண்டையில் போண்டா அடைத்துள்ளது. இதில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பத்மாவதியை கொண்டு சென்றனர்.
பரிசோதித்த மருத்துவர்கள் பத்மாவதி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.