கணவன் கொலைக்கு பழிவாங்கிய மனைவி ! சினிமா பாணியில் ஒரு கொலையும் கைதும்
கணவரின் கொலைக்கு காரணமானவரை பழிக்கு பழியாக ஆட்களை வைத்து கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை வடக்கு மாம்பலத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. வயது 38. இவரின் கணவரான கந்தன் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும், பாஸ்கர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கணவரை பாஸ்கர் தான் கொலை செய்துள்ளார் என எண்ணிய புவனேஸ்வரி அவரை கொலை செய்ய திட்டம் வகுத்துள்ளார். இதற்காக சில நபர்களை அணுகி அதன் மூலம் கொலை திட்டத்தை நடத்தியுள்ளார்.
அதன்படி கும்பல் ஒன்று, பாஸ்கர் வழக்கமாக செல்லும் டாஸ்மாக் கடைக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை பின்தொடர்ந்து சென்றுள்ளது. அங்கு வைத்து பாஸ்கரை சரமாரியாக தாக்கிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளது. கும்பலின் சரமாரியான தாக்குதலில் பாஸ்கர் மரணமடைந்தார். இவ்விவகாரம் தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் 5 பேர் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் புவனேஸ்வரி என்பது தெரியவந்தது. இதனையடுத்து புவனேஸ்வரியை கைது செய்த போலீசார் அவரிடம் தெடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.