செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது டாரஸ் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் விஜயா (50) என்பவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்று காலை கணவரும் மனைவியும் மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவவலறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த நிலையில், கணவர் கதறி அழுத நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய டாரஸ் லாரி ஓட்டுநர் ரமேஷை என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனரக வாகனங்கள் வெளிவட்ட சாலையில் சென்றால் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் செல்வதால் இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கனரக வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.