மாட்டிற்கு தண்ணீர் வைக்க சென்ற பெண் - மின்சாரம் தாக்கி பரிதாப உயிரிழப்பு
அரியலூரில் மாட்டிற்கு தண்ணீர் வைக்க அன்னக்கூடையை எடுத்த விவசாயப் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரின் மனைவி ஜோதி (40). கணவரை இழந்த இவர், மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தனது மகள் சந்திரலேகாவுடன் வசித்து வந்தார். அங்கு கறவை மாடுகள் வைத்து வருமானம் ஈட்டி வந்தார்.
இன்று வழக்கம்போல் கறவை மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்கு வீட்டின் முன்பு இருந்த அன்னக்கூடையை ஜோதி எடுத்துள்ளார். அப்போது வீட்டிற்கு வரும் மின்சார கம்பி அறுந்து அன்னக்கூடையில் கிடந்ததுள்ளது. இதனை கவனிக்காமல் அன்னக்கூடையை ஜோதி எடுத்தபோது, அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவ்வழியே சென்ற உறவினர்கள் ஜோதி இறந்து கிடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.