பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு மோகன்ராஜ், கார்த்திக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதி இருவரும் ஊர் ஊராகச் சென்று கூடை பிண்ணியும், மூங்கில் வேலி அமைத்தும் அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அரியலூர் அருகே உள்ள பாலாம்பாடி பகுதியில் உள்ள முட்புதரில், ராணி, கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மூர்த்தியை காணவில்லை என்பதால் சந்தேகமடைந்த போலீசார், அவருடைய செல்போன் நம்பரைத் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. பின்னர் செல்போன் சிக்னலை வைத்து மூர்த்தியைத் தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் அவரை கைது செய்தனர்.
இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், "மனைவி ராணியிடம் மகளிர் சுய உதவி குழுவிற்குக் கட்ட கொடுக்கும் பணத்தைக், கட்டாமல் செலவு செய்து விடுகிறார். இதனால் குழு ஏஜென்ட் தன்னை தொடர்பு கொண்டு பணம் கேட்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்.
திருப்பூரில் இருக்கும் இளைய மகன் கார்த்திக் மாதம், மாதம் கொடுத்து வந்த 5 ஆயிரம் பணத்தை இனி கொடுக்கக் கூடாது என்று மனைவி கூறியதால் ஆத்திரமடைந்ததாகவும், தன்னுடன் தன் மனைவி நெருக்கமாக இல்லாமல் இருந்து வந்ததால் அவருடைய நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்."
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணத்தை செலவு செய்ததால் கட்டிய மனைவியை, கணவனே கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.