ஆவடி: திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பணமோசடி செய்த பெண்.. சிறையில் அடைப்பு

நான் யாரும் இல்லாத அனாதை, எனக்கு திருமணம் ஆகவில்லை, உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்
புவனேஸ்வரி
புவனேஸ்வரி pt web

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபி ராஜன் (33). இவர் கேட்டரிங் டிப்ளமோ படிப்பை முடித்து விட்டு அம்பத்தூரில் தங்கிச் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் தனியார் நாளிதழில் ஒன்றில் வரன் வேண்டி செல்போன் நம்பருடன் விளம்பரம் செய்துள்ளார்.

இதனைப் பார்த்த ஆவடியைச் சேர்ந்த சிவாஸ்ரீ என்ற பெண் கோபியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். "நான் யாரும் இல்லாத அனாதை, எனக்கு திருமணம் ஆகவில்லை, உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய கோபி, சிவாஸ்ரீயுடன் பேசி பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் சிவாஸ்ரீ "எனக்குக் கடன் தொல்லை அதிகமாக இருக்கிறது, என்னால் சமாளிக்க முடியவில்லை. நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்" எனக் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கோபி ராஜன் சமாதானம் செய்து, அவ்வப்போது அவரது வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பி வந்துள்ளார். இதுவரை 15 லட்சம் வரை பணம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கோபி ராஜன் திருமணம் செய்து கொள்ளலாம் என சிவாஸ்ரீயிடம் கூறியுள்ளார். திருமணம் குறித்துப் பேசும் போதெல்லாம் சிவாஸ்ரீ அதைத் தட்டிக் கழித்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கோபி ராஜன் ஆவடி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்போனில் திருமணம் செய்து கொள்வதாகப் பேசி அவரை ஏமாற்றி வந்தது ஆவடி மோரை பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி [42] என்பதும், இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது

இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com