சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்று வரும் ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா,ஆணையர் நந்தக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தினாலும் அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.