சத்தியமங்கலம் அருகே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற அதிகாரிகளின் வாகனத்தை காட்டு யானை வழிமறித்து நின்றது.
பவானிசாகர் தொகுதியில் அடர்ந்த மலைப்பகுதியில் உள்ள கோட்டமாளத்தில் வாக்குகள் பதிவான இயந்திரங்களுடன் அதிகாரிகள், கோபிசெட்டிபாளையம் நோக்கி பயணத்தைத் தொடங்கினர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆசனூர் சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று குட்டியுடன் நின்றுகொண்டிருந்தது. 2 மணி நேரம் வரை அந்த தாய் யானையும் குட்டியும் நகராமல் சாலையிலேயே நின்று கொண்டிருந்தன. இதனால் அதிகாரிகளால் அந்த இடத்தை விட்டு முன்னேற முடியாமல் போனது.
2 மணி நேரத்துக்குப் பின் மனமிறங்கிய காட்டுயானை தனது குட்டியுடன் காட்டுக்குள் திரும்பியது. இதற்காக காத்துக் கொண்டிருந்த அதிகாரிகள் தங்கள் வாகனத்தை எடுத்துக் கொண்டு கோபிசெட்டிபாளையம் வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்றடைந்தனர்.