கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி - விசாரணையில் வெளிவந்த உண்மைகள்

கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி - விசாரணையில் வெளிவந்த உண்மைகள்

கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி - விசாரணையில் வெளிவந்த உண்மைகள்
Published on

கணவனை கொலை செய்து, உடலை கழிவுநீர் தொட்டிக்குள் மறைத்துவைத்து நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த அய்யாப்பிள்ளை, மனைவி பரிமளாவுடன் தென்குத்து என்ற கிராமத்தில் வசித்து வந்தார். பரிமளாவுக்கு இவர் 2ஆவது கணவர். 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி அய்யாபிள்ளை திடீரென காணாமல்போனார். அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், எங்காவது மதுபோதையில் மயங்கி கிடப்பார் என நினைத்த உறவினர்கள், விரைவில் வீடு திரும்புவார் என நம்பியிருந்தனர். இரண்டு வாரங்கள் ஆகியும் அய்யாபிள்ளை வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரின் சகோதரர், வடலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

முதற்கட்ட தகவல்கள் திரட்டப்பட்டபின், மனைவி என்ற அடிப்படையில் முதலில் அவரிடம் விசாரணையை தொடங்கியது காவல்துறை. காவலர்களின் கேள்விகளை பதற்றத்தோடு எதிர்கொண்ட பரிமளா, முரணான பதில்களைத் தெரிவித்ததால், காவல்துறையின் சந்தேகப் பார்வை அவரை நோக்கி திரும்பியது. விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட பரிமளாவிடம் இருந்து, பல அதிர்ச்சிக்குரிய உண்மைகள் தெரியவந்தன. மதுப்பழக்கத்திற்கு அடிமையான அய்யாபிள்ளை, அடிக்கடி குடித்துவிட்டுவந்து பரிமளாவிடம் சண்டையிடுவார் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்றும் மதுபோதையில் இருந்த அய்யாபிள்ளை, வழக்கம்போல் பிரச்னை செய்துள்ளார். ஆத்திரமடைந்த பரிமளா, திடீர் தாக்குதல் நடத்தியதில் நிலைகுலைந்த அவர், அங்கேயே மயங்கிவிழுந்துள்ளார்.

அய்யாபிள்ளை மதுகுடித்து இருந்ததால், போதை தெளிந்ததும், எழுந்து விடுவார் என நினைத்த பரிமளா, தனது வேலைகளை கவனிக்கத் தொடங்கியுள்ளார். ஆனால், நள்ளிரவு வரை அவர் எழவே இல்லை. பதறிப்பேன பரிமளாவோ முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தபோது, பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார் அய்யாபிள்ளை. செய்வதறியாமல் திகைத்த பரிமளாவுக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. ஆள் அரவமின்றி இருந்த நள்ளிரவு நேரத்தில், வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியை திறந்த பரிமளா, அதில் அய்யாபிள்ளையின் சடலத்தை போட்டு மூடிவிட்டதாக காவல்துறை கூறுகிறது. 

யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, கழிவுநீர் தொட்டியை திறக்கும் பகுதியை சிமெண்ட் பூசி மறைத்துவிட்ட பரிமளா, அக்கம் பக்கத்தினரிடம் ஒன்றும் தெரியாதது போலவே நடந்து கொண்டதாக காவலர்கள் கூறுகிறார்கள். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், கழிவுநீர் தொட்டியை உடைத்து அய்யாபிள்ளையின் சடலத்தை எலும்புக் கூடாக மீட்டனர். கணவனை கொலை செய்துவிட்டு காணாமல்போனதாக நாடகமாடிய பரிமளா கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com